Sunday, 30 October 2011

பூக்கள் பூக்கும் தருணம் (1)

தனது காலை உடற்பயிற்சியை முடித்துவிட்டு வீடு திரும்பினாள் கவிநா. சூரிய ஒளி ஜன்னல் வழி வீட்டினுள்ள சோபாவில் பட்டது. வீட்டினுள்ளே நுழைந்தவள் ஜன்னல் மறைவு துணியால் ஜன்னலை மூடினாள். வாசலில் இருந்து கொண்டு வந்த செய்தித்தாளை மேசையில் போட்ட படியே,
"கிரீஷ், ஏந்திரி! இன்னும் என்ன தூக்கம்? ஏந்திரி கிரீஷ்,"
என்று சொல்லி கொண்டே, அறையினுள் நுழைந்தாள் கவிநா. ஜன்னலை எட்டி பார்த்தபடி கிரீஷ் நின்று கொண்டிருந்தான்.

"ஓ ஏந்திரிச்சுட்டீயா? சரி குளிச்சிட்டு வா. உனக்கு என்ன வேணும்? காபியா டீயா?" என கேட்டுகொண்டே கலைந்திருந்த போர்வையை சரி செய்து மெத்தையில் வைத்தாள். ஜன்னல் வெளியே விட்ட பார்வையை கவிநா பக்கம் திருப்பி, கேள்வியை மறுபடியும் சொல்லியபடி கிரீஷ், "காபியா? டீயா? ம்ம்ம்...நீ போதும்!" என்று சிரித்தான்.

"என்னது??” மெத்தையில் கிடந்த தலையணையால் கிரீஷை செல்லமாய் அடித்தாள். காலை உணவு சாப்பிட அம்ர்ந்தான் கிரீஷ். அங்கிருந்த புகைப்பட ஆல்பத்தை திறந்து அதன் முதல் படத்தை கண்சிமிட்டாமல் பார்த்துக் கொண்டு இருந்தான். சமையல் அறையிலிருந்து ரொட்டியையும் காபியையும் எடுத்து வந்த கவிநா அவன் நிலைமையை புரிந்து கொண்டாள்.

அவன் அருகே சென்று, "கிரீஷ், இது நான். கவிநா. இது ராஜேஷ். இவ லீனா. நம்ம எல்லாரும் கல்லூரி படிக்கும்போது வெளியூர் போனோமே அப்ப எடுத்த படம். நீ தானே இந்த படத்த எடுத்த." என்று ஒரு குழந்தையிடம் பாடம் சொல்லி கொடுப்பது போல் ஒவ்வொன்றை மெதுவாய் அமைதியாய் சொன்னாள் கவிநா. கிரீஷ் அவளைப் பார்த்து புன்னகையித்தான்.

"சரி சாப்பிடு," என்று கவிநா கிரீஷின் கையில் காபியைக் கொடுத்தாள். மீண்டும் சமையல் அறைக்குள் நுழைந்தவளை கிரீஷ் கூப்பிட்டு "கவி, இன்னிக்கு தபால்காரன் வந்திருந்தான்."

அன்று ஞாயிற்றுக்கிழமை.

கவிநா ஒன்றும் சொல்லாமல் உள்ளே சென்றாள். மதியம் 12 மணி அளவில் இருவரும் படம் பார்க்க திரையரங்கிற்கு கிளம்பினார்கள். கொஞ்சம் தூரமான பயணம் என்பதால் கிரீஷை வாகனத்தை ஓட்டவிடவில்லை கவிநா. அவளே ஓட்டினாள். பக்கத்தில் அமைதியாய் வந்த கிரீஷ், திடீரென்று தனக்கு தானே பேசிகொண்டான்.

"ஆமாண்டா சொல்லு. நான் மார்ஸ்ல தான் இருக்கேன். நீ எங்க இருக்க இப்போ? ஓ..நிலாவிலா?" என்று ஒரு நண்பனுடன் பேசுவது போல் அவன் பேச்சுகள் அமைந்தன.

ஒரு வினாடி கழித்து யாரோ ஒரு பெண்மணியிடம் பேசுவது போல் "இந்த ஏரியா இங்க இல்ல. நீங்க விமானம் எடுத்து போகனும்." சிரித்தமுகத்துடன் தனது பேச்சுகளை தொடர்ந்தான் கிரீஷ். அவன் பேசும்போது அவனது பார்வை கீழேயே இருந்தது. அவ்வபோது கத்தி கூச்சல் போட்டான். ஆனால், வாகனத்தை ஓட்டி கொண்டிருந்த கவிநா அமைதியாய் இருந்தாள்.

கவிநா தனது கவனத்தை சாலையிலும் வைத்திருந்தாள் அதே சமயம் கிரீஷ் மேலேயும் இருந்தது. பாதுகாப்பு கருதி வாகன கதவுகளைப் பூட்டினாள். அவன் இருக்கும் மனநிலையை புரிந்த கொண்ட கவிநா ஏதும் சொல்லாமல் இருந்தாள். கொஞ்ச நேரம் கழித்து, சுயநினைவுக்கு வந்தவனாய் அமைதியாய் மாறி போனான் கிரீஷ். சற்று நேரத்திக்கு முன் காணப்பட்ட கிரீஷுக்கும் இப்போது மாறிய கிரீஷுக்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தன.

"ஏய் கவி, என்னமா ஒன்னுமே பேசாம வர,என்ன ஆச்சு?" என்றான் கிரீஷ் கியரின் மேல் விழுந்த துப்பட்டாவில் கைவைத்து. 'ஒன்னுமில்லை ' என்பதுபோல் அவனைப் பார்த்துப் புன்னகையித்தாள். "சும்மா,உன்னைய பத்தி நினைச்சுகிட்டு வந்தேன்." புன்னகை மாறாமல் சொன்னாள்.

"என்னைய பத்தி நினைச்சுகிட்டே இருக்க நான் என்ன உன் காதலனா? நான் உன் கணவன்!" என்று கூறி அவன் அடித்து நக்கலுக்கு அவனே சிரித்தான். விளையாட்டாய் முறைத்தாள் கவிநா.

"ஒகே சாரி. அடுத்த தடவ நல்ல ஜோக் அடிக்குறேன்" என்றதும் வாய் விட்டு சிரித்தாள் கவிநா.

ஈசூன் ஜீவி திரையரங்கை வந்து அடைந்தனர். 'அலைபாயுதே' படத்தை பார்த்துக் கொண்டிருந்தனர். இடைவேளையின் போது நிரம்பி வழிந்த கூட்டங்கள் கழிவறைக்கும் பாப்கார்ன் வாங்கவும் சென்றன.
"கவி, இந்த படத்த பார்க்கும்போது நம்ம கல்லூரி நாட்கள் ஞாபகத்திற்கு வருது. நம்ம காதல்ல ஜெயிக்க வைக்க எத்தன போராட்டம்?" என்றபோது கிரீஷ் குரலில் ஒரு வேதனை தெரிந்தது .


தொடர்ந்தான் கிரீஷ், "ஐ  லவ்  யூ கவி." அமர்ந்திருந்த நாற்காலியின் கைபகுதியில் வைத்திருந்த கவிநாவின் கைகளை இறுக்க பிடித்து கொண்டு.
புன்னகையைப் பதிலாய் தந்த கவிநா அவனின் தலைமுடியை அழகாய் கலைத்தாள்.
இடைவேளை முடிந்து பத்து நிமிடங்கள் வரை படத்தை ரசித்து கொண்டிருந்த கிரீஷ், கவிநா காது அருகே சென்று "கவி, வா போவோம். படம் நல்லா இல்ல. எனக்கு பிடிக்கல."

சற்று குழம்பம் அடைந்த கவிநா "கிரீஷ், நீ தானே நல்லா இருக்குனு சொன்னேன் இப்போ..."



(பகுதி 2)

No comments:

Post a Comment